ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலியா துணைத் தூதர்

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலியா துணைத் தூதர்
  • PublishedJune 11, 2023

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலியா துணைத் தூதர் ஓஃபேரல், சூப்பர்ஸ்டாரை சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 70 வயதைக் கடந்த போதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினி. அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கெஸ்ட் ரோலில் ரஜினி நடிக்கிறார்.

இதையடுத்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இப்படி ரஜினியின் 170-வது படம் குறித்து சுட சுட அப்டேட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில், ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ரஜினியுடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதர் ஓஃபேரல் மற்றும் சாரா ஆகியோர் சந்தித்த புகைப்படம் தான் அது. அவர்கள் இருவரும் ரஜினியின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்து ரஜினியை சந்தித்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ஓஃபேரல் கூறியுள்ளதாவது :

“கலாச்சாரத்தையும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்பை இணைக்கிறது சினிமா. புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்காக வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு ரஜினியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவரும் ரஜினியின் தீவிர ரசிகர் என தெரிகிறது. மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *