காந்தாரா சாப்டர்-1 : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகின்றது

காந்தாரா சாப்டர்-1 : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகின்றது
  • PublishedOctober 13, 2025

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளா காந்தாரா சாப்டர்-1 திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் செய்த கன்னட படம் என்கிற சாதனை படைத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்துக்கு அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்தார். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீக்வல் அதாவது இதன் முந்தைய பாகமாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவாகி கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியுள்ளார்.

இதில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் திரைக்கதை, பின்னணி இசை மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

காந்தாரா திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் ரூ. 509.25 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் வசூல் 600 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி வெளியான இப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், 11ஆம் நாளில் உலகம் முழுக்க 655 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம், பிரபாஸின் ‘சலார்’ மற்றும் ‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படங்களின் வசூல்களை முந்தி, சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *