எதிர்நீச்சல் சீரியலை விட்டு அதிரடியாக விலகிய நடிகை

எதிர்நீச்சல் சீரியலை விட்டு அதிரடியாக விலகிய நடிகை
  • PublishedAugust 10, 2025

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ஹிட்டானது. அதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகர்னாக நடித்து வந்த மாரிமுத்து தான்.

அவரின் கதாபாத்திரமும், நகைச்சுவை கலந்த வில்லத்தனமும் சீரியலுக்கு மிகப்பெரிய தூணாக இருந்தது. இதன் காரணமாக டிஆர்பியிலும் நம்பர் ஒன் சீரியலாக ‘எதிர்நீச்சல்’ இருந்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக 2023 ஆம் ஆண்டு மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்குப் பின்னர் இந்த சீரியலில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக மாரிமுத்து கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் பல நாட்களாக நீடித்தது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடிகர் வேலராமமூர்த்தி மாரிமுத்து கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இருப்பினும் அவரால் மாரிமுத்து அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

கதையில் ஏற்பட்ட சுணக்கம், மாரிமுத்துவின் இழப்பு ஆகிய காரணங்களால் ‘எதிர்நீச்சல்’ முதல் பாகம் பாதியிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்நீச்சல் பாகம் 2 வை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அனைத்து கதாபாத்திரங்களும் எதிர்நீச்சல் 2 சீரியலிலும் தொடர்ந்தது.

ஆனால் ஜனனியாக நடித்து வந்த மதுமிதா விலக, அவருக்குப் பதிலாக பார்வதி ஜனனியாக பார்வதி நடித்து வருகிறார். பாகம் இரண்டு ஒளிபரப்பான முதல் சிறிது நாட்கள் டிஆர்பி யில் அடிவாங்கியது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை. எனவே முதல் பாகத்தில் எடுத்த அஸ்திரத்தை இரண்டாவது பாகத்திலும் இயக்குனர் எடுத்தார்.

முதல் பாகத்தில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக கரிகாலன் ஆதிரை திருமணத்தை நடத்தி வைத்தது போலவே இரண்டாம் பாகத்திலும் தர்ஷனுக்கு அன்புக்கரசி என்கிற பெண்ணோடு திருமண ஏற்பாடுகளை ஆதி குணசேகரன் செய்து வருகிறார்.

இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத தர்ஷன் தான் காதலிக்கும் பார்கவியை திருமணம் செய்து கொள்வேன் என்று பிரச்சனை செய்து வருகிறார். சீரியல் இப்படியாக நகர்ந்து வரும் நிலையில் தற்போது ஈஸ்வரி ஆதி குணசேகரனால் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவரின் கழுத்து நெறிக்கப்பட்டு, சுவரில் மோதி இருப்பதாக மருத்துவர் கூற அனைவரின் சந்தேகமும் ஆதி குணசேகரன் மீது திரும்புகிறது.

இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற விறுவிறுப்போடு கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில், தற்போது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் எதற்காக விலகினார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை. தனது விலகல் குறித்து இன்னமும் கனிகா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி ஈஸ்வரி கதாபாத்திரம் முடிவுக்கு வர இருப்பதாகவும், அதன் காரணமாகவே கனிகா சீரியலில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஈஸ்வரி கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறதா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *