ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் அனல்பறக்கும் புரோமோ – நெல்சன் வைத்த ட்விஸ்ட்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.
அதில், நெல்சன், ரஜினி, கமல் இருவரின் ரூமுக்கு வெளியே நின்றுகொண்டு முதலில் யாரை சந்திக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்க, அப்போது அந்த வழியாக வந்த அனிருத், இரண்டு விரலை காட்டி எதாச்சும் ஒன்னை தொடுங்க என சொல்ல, நெல்சனும் ஒரு விரலை தொட்டதும், தான் எந்த ராகத்தில் இசையமைக்கலாம் என்பதற்காக உன்னிடம் கேட்டதாக சொல்லிவிட்டு செல்கிறார்.
நெல்சனும் அதே ஃபார்முலாவை பாலோ பண்ணி, இரண்டில் ஒரு விரலை தேர்வு செய்து முதலில் கமலின் அறைக்கு செல்கிறார். அங்கு சென்று அவர் ஒரு கோர்ட் சூட்டை எடுக்கப்போகையில், ரஜினி சாரும் அதே தான் எடுத்திருக்கிறார் என்று சொன்னதும், சட்டென கமல் வேறு ஒரு கோர்ட்டை எடுக்கிறார்.
அதேபோல் ரஜினியை நெல்சன் சந்திக்கும் போது கமல் சார் இந்த ஷூவை எடுத்திருக்கிறார் என்று சொன்னதும், ரஜினி வேறொரு ஷூவை தேர்வு செய்கிறார். இப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரும் புதிருமான முடிவை எடுக்கிறார்கள். அதன்பின்னர் ஸ்டைலாக நடந்து வந்து காரில் ஏறுகிறார்கள். ஏறியதும் நெல்சனிடம் யார் ஹீரோ என கேட்கிறார் கமல். அருகில் இருக்கும் ரஜினியும் தன் பங்கிற்கு, கேக்குறாங்கள்ல சொல்லுங்க ஜீ யாரு ஹீரோ என கேட்கிறார்.
நெல்சன் பதில் சொல்வதற்குள் கமல் வேகமாக காரை எடுத்து கிளம்புகிறார். இப்படி புரோமோவிலேயே ட்விஸ்ட் வைத்து நெல்சன் செம ட்ரீட் கொடுத்துள்ளார்.
இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள். இப்படம் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும் என கூறி வருகின்றனர்.