சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு – அண்ணே மன்னிச்சிடுங்க அண்ணே

சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு  – அண்ணே மன்னிச்சிடுங்க அண்ணே
  • PublishedSeptember 24, 2024

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலப்பட விவகாரம் இந்து மக்களின் நம்பிக்கைகள், மன உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் பெரிய அளவில் அரசியல் சர்ச்சையாக நாளுக்கு நாள் மாறி வருகிறது.

இந்த நிலையில் தனது மெய்யழகன் பட புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர்கள் லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர் இதற்கு அவர் அளித்த பதில் அவரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம் ‘லட்டு வேணுமா’ என்று நகைச்சுவையாக கேட்டதற்கு, நடிகர் கார்த்தி அளித்த பதில் தான் சர்ச்சையாக வெடித்துள்ளது.

லட்டு என்பது இப்போது மிகவும் சென்சிடிவான ஒரு விஷயம்… அதைப் பற்றி பேசக்கூடாது என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். ‘தற்போது லட்டு பற்றி பேசவே கூடாது’ என்றும் கார்த்தி கூறி இருந்தார். தற்போது நாடு முழுவதும் லட்டு என்பது மிகவும் விவாத பொருளாக மாறிவிட்ட நிலையில் அதைப் பற்றி குறைவாக பேசுவதே நல்லது என்று கார்த்தி கருத்து தெரிவித்தார்.

லட்டு குறித்து நடிகர் கார்த்தி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் கூறிய கருத்துக்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “லட்டு பற்றி நகைச்சுவை பேசுறாங்க.. ஒரு பட விழாவுல லட்டு என்பது ஒரு முக்கியமான விஷயம்னு ஒரு ஹீரோ சொன்னாரு. மறுபடியும் இனிமே அப்படி சொல்லாதீங்க” என்று பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

அதேபோல் ஒரு நடிகராக உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.. ஏதாவது பேசறதுக்கு முன்னாடி.. நூறு தடவை யோசிச்சு பேசுங்க. சனாதன தர்மத்தை காப்பாத்துங்க” என்று பவன் கல்யாண் கூறினார். தற்போது நடிகர் கார்த்தி கூறிய கருத்துக்கள் தொடர்பான வீடியோ மற்றும் பவன் கல்யாண் பேசிய வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பவன் கல்யாண் கொடுத்த வார்னிங்கை அடுத்து நடிகர் கார்த்தி எக்ஸ் தளம் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக எப்போதும் பண்பாட்டுடன் பிடிப்பாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *