திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கொந்தளித்த லோகேஷ் கனகராஜ்…

திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கொந்தளித்த லோகேஷ் கனகராஜ்…
  • PublishedNovember 19, 2023

திரைப்படங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள் தொடர்பான நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல முன்னணி நடிகர்களுடன் கொடூர வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். வில்லத்தனமான நடிப்பிற்கு புகழ்பெற்ற மன்சூர் அலிகான், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் வெளிப்பாடாக, நடிகர் விஜயின் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை லோகேஷ் நடிக்க வைத்தார்.

லியோ படத்தில் தனக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்த்த மன்சூர் அலிகானுக்கு, ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனால், அதிருப்தி அடைந்த மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜை விமர்சித்து இருந்தார். படக்குழுவினருடன் முரண்பாடு இருந்தாலும், லியோ படத்தின் வெற்றி விழாவில் மன்சூர் அலிகான் மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில், தனக்கே உரிய பாணியில், பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் மன்சூர் அலிகான் பேசினார். இருப்பினும், அவரது வழக்கமான பேச்சுகளுடன் ஒப்பிடுகையில், இது ஏதோ பரவாயில்லை என்ற ரீதியில் இருந்தது.

ஆனால், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என பிறர் முகம் சுழிக்க வைக்கும் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை திரிஷா, மன்சூர் அலி கானின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் மோசமான பார்வை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும் மன்சூர் அலிகான் போன்ற மோசமான நபருடன் சினிமா காட்சியில் சேர்ந்து நடிக்காததற்கு, தான் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் அவருடன் இணைந்து நடிக்க போவதில்லை என்றும் திரிஷா உறுதியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, மன்சூர் அலிகானின் பேச்சுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த துறையிலும் பெண்களை அவமதிப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள பின்னணி பாடகி சின்மயி, ராதா ரவி காலத்தில் இருந்தே வில்லன் நடிகர்கள் இது போன்று பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *