பெரும் குலப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி
![பெரும் குலப்பங்களுக்கு மத்தியில் இடை நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணத்தின் இசை நிகழ்ச்சி](https://cinemazda.com/wp-content/uploads/2024/02/Hariharan-Concert-2.webp)
தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(9) மாலை நடைபெற்றது.
குறித்த இசைநிகழ்ச்சிக்காக நடிகை தமன்னா, யோகி பாபு, புகழ், சான்னி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், கலா மாஸ்டர், ரச்சிதா, ஸ்டான்லி, டிடி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.
இதன்போது, பாதுகாப்பு வேலைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இளைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த விடாமல் சத்தமிட்டதுடன், அரங்கத்திற்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பல நட்சத்திரங்கள் அமைதியாக இருக்கும்படியு கேட்டும் இளைஞர்கள் ஓய்ந்தபாடில்லை.
இதன்போது, “ஆடியன்ஸ் ப்ளீஸ், ப்ளீஸ் உங்க கால்ல விழுறம்” என கலா மாஸ்டர் யாழ் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எனினும் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், கலவரத்தாலும், குறித்த ஹரிகரன் இசை நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இத்தனை அமளிக்கு மத்தியிலும் நடிகை தமன்னாவின் நடனம் ஒன்று அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது.