சென்னையில் நடக்கும் விழாவில் தமிழில் பேசாமல் எப்படி…அபிராமி

சென்னையில் நடக்கும் விழாவில் தமிழில் பேசாமல் எப்படி…அபிராமி
  • PublishedApril 18, 2025

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான த்ரிஷாவை விடவும், மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் மீது அதிக ஆர்வம் உடையவர் என்பதை இன்று நடைபெற்ற ‘தக் லைப்’ விழாவில் வெளிப்படுத்தினார் நடிகை அபிராமி.

‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த அபிராமி, தற்போது ‘தக் லைப்’ படத்தில் அவருடன் மீண்டும் சேர்ந்து நடித்துள்ளார்.

இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தேசிய அளவிலான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

அதனால், படக்குழு சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மேடையில் இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தார்.

முதலில் பேசிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது என்று சொல்லிவிட்டு, தமிழில் மட்டுமே பேசினார். அடுத்து பேசிய அசோக் செல்வனும் தமிழில் பேசி சில வரிகள் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார்.

அடுத்து பேசிய நடிகை அபிராமி, சென்னையில் நடக்கும் விழாவில் தமிழில் பேசாமல் எப்படி, என தமிழில் மட்டுமே பேசினார். ஆனால், அடுத்து பேசிய த்ரிஷா தமிழில் ஆரம்பித்து விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். இடையிடையே மட்டும் தமிழில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

சிம்பு ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசி, கொஞ்சமாக தமிழில் பேசினார். கமல்ஹாசன் ஆங்கிலம், தமிழ் என மாறி மாறிப் பேசினார்.

மணிரத்னம், ஏஆர் ரகுமான் ஆங்கிலத்தில் சில வரிகள் மட்டுமே பேசி சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் எதுவுமே பேச மாட்டேன் என மறுத்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *