என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டும்…சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.
பின்னர் அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ‛சிட்டாடல்’ வெப் தொடர் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ‛ரக்ட் பிரம்மாண்டம்’ என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். மேலும் சமந்தாவே தயாரித்து கதாநாயகியாக நடிக்கும் ‛பங்காராம்’ திரைப்படமும் விரைவில் துவங்கவுள்ளது.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி: நான் 20 வயதில் இந்தத் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணமெல்லாம், எத்தனை பிராண்டுகள் நம்மை அணுகி, நம் முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன்.
பெரிய பன்னாட்டு பிராண்டுகள் அனைத்தும் என்னை தங்கள் பிராண்ட் தூதராக விரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், இப்போது நான் தவறான பொருள்களை தேர்வு செய்து, தவறான உதாரணமாக முடியாது. அந்த சிறு வயது முட்டாள்தானமாக செயல்பட்ட சமாந்தாவிடம் இந்த சமந்தா மன்னிப்புக் கேட்க வேண்டும்.
என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு சரியானது எனத் தோன்றுவதைதான் பின்பற்ற வேண்டும்.
அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன். அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையில் ஒப்புகொள்கிறேன். என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக தவறான முன் உதாரணமாக அமைந்துவிடக்கூடாது. கடந்த வருடம் நான் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அதனால் கோடிக்கணக்கானப் பணத்தை இழந்துவிட்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.