சௌந்தர்யாவின் விபத்தில் நானும் சிக்கி இருப்பேன்… நடிகை மீனா

சௌந்தர்யாவின் விபத்தில் நானும் சிக்கி இருப்பேன்… நடிகை மீனா
  • PublishedSeptember 17, 2025

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மீனா. என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

மீனா என்று சொன்னாலே மக்கள் அனைவருக்கும் எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், சிட்டிசன் போன்ற படங்கள் தான் நியாபகம் வரும்.

மீனா பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகர் சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சமீபத்தில், நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மீனா, மறைந்த நடிகை செளந்தர்யா குறித்து பேசியுள்ளார். அதில், எனக்கும், செளந்தர்யாவுக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்துக் கொண்டுதான் இருந்தது.

செளந்தர்யா எனக்கு நல்ல தோழி என்பதோடு மட்டுமில்லாமல் அற்புதமான நபர். செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். அன்று தேர்தல் பரப்புரைக்கு நானும் அவருடன் அந்த ஹெலிகாப்டரில் சென்றிருக்க வேண்டியது. என்னையும் அழைத்தார்கள்.

ஆனால், அரசியல், பரப்புரை ஆகியவற்றில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. எனவே ஷூட்டிங் இருப்பதாக சொல்லி அன்றைய தினம் செல்வதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று மீனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *