இந்தியன் – 2… சோதனைகள் எல்லாம் சாதனையாக மாற்ற வருகின்றார் சேனாதிபதி…

இந்தியன் – 2… சோதனைகள் எல்லாம் சாதனையாக மாற்ற வருகின்றார் சேனாதிபதி…
  • PublishedJuly 10, 2024

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

இந்தியன் 2 தாண்டிவந்த தடைகள்….

“அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!” என்ற வாசகத்துடன் 2019-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர் ஷங்கர்.

இந்தியன் முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் பாக அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

லைகா நிறுவனம் இந்தியன் 2 தயாரிக்க ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்‌ஷ்மி சரவணக்குமார் எழுத்தில் ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தது படத்தின் மீதான ஆவலை மேலும் கூட்டியிருந்தது.

படத்தின் வேலைகளும் தொடங்கி நடைபெற்று வந்தது. 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.

கொரோனாவால் உலகம் செய்வதறியாது தவித்து நின்றது. ஒரு வழியாக 2020-ம் ஆண்டில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடந்து வந்தது.

அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் பூந்தமல்லி அருகே நடந்த படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ரத்து செய்து, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கமல்ஹாசன் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்த உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்துக்கு போலீஸார் அழைக்கக் கூடாது. அதேநேரம், புலன் விசாரணை தொடர்பாக விசாரணை அதிகாரி முன்பு கமல் ஆஜராக உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்தப் பிரச்சினையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு ஒரு வழியாக தீர்வு காணப்பட்டது.

ஆனால், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடிகர் விவேக், அக்டோபர் மாதத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இப்படியாக இப்படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிபோய் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் படம் கைவிடப்பட்டதாக பேசப்பட்டது.

இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் தேதி, RC15 , ராம்சரணின் 15-வது திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்ட பேச்சை உறுதி செய்தது. தொடர்ந்து ஷங்கர் ராம்சரணின் படத்தை இயக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த களேபரங்களுக்கு மத்தியில், கமலின் விக்ரம் பட வெற்றி ‘இந்தியன் 2’ படத்தை முடிப்பதற்கு பெரும் உதவியாக அமைந்தது. அதற்குள் இயக்குநர் ஷங்கரும் ராம்சரண் படத்தை முடித்திருந்தார்.

லைகா – ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஒத்துழைப்புடன் பல சோதனைகளைக் கடந்து, ஜூலை 12-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகிவிட்டது இந்தியன் 2. சேனாதிபதி சந்தித்த இந்த சோதனைகள் எல்லாம் சாதனையாக மாற்ற ரெடியாகி விட்டார். காத்திருங்கள் இன்னும் 2 நாட்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *