விஜய்க்கு போட்டியாக விஷால்? அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

விஜய்க்கு போட்டியாக விஷால்? அதிரடியாக வெளியிட்ட அறிக்கை
  • PublishedFebruary 7, 2024

விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால், நான் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை என்று அறிக்கை வெளியிட்டு, அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் கட்சி பெயரை கடந்த வாரம் அறிவித்தார்.

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காமல், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதன்பின் திரையுலகிலிருந்து முழுவதுமாக விலகி முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட போவதாகவும் விஜய் அறிவித்து இருந்தார்.

விஜய் கட்சி தொடங்கியதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் அரசியலில் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியானது. அவர் தனது ரசிகர்கள் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என மாற்ற இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்சியின் பெயர் இன்று வெளியாகும் என்று இணையத்தில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், நடிகர் விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

சமூகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகராக, சமூக சேவனாக உங்களின் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரம் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே, என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாக கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும், பல எண்ணற்ற, ஏழை எளிய மாணவர் மாணவியர்கள் படிக்க உதவி செய்து வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அது மட்டுமின்றி படப்பிடிப்புக்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து, அவர்களின் அடிப்படை தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் நல பணிகளை செய்தது இல்லை. நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவரின் வாக்குப்படி, என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டுதான் இருப்பேன். அது என்னுடைய கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம், நான் செய்து வரும் மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன். வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும், முடிவு எடுக்க வைத்தால் , அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *