24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி .
தமிழ் சினிமா இயக்குநர்களில் யதார்த்தமான காதலை அதன் ஆழமான வலியோடு சொன்ன அமீரின் பாணி தனித்துவமானது. அதேபோல், ஒரு சாக்லேட் பாய் இமேஜில் இருந்து தன்னை ஒரு அசுர நடிகராக மாற்றிக்கொண்ட சூர்யாவின் வளர்ச்சியும் அசாத்தியமானது. இவர்கள் இருவரின் கூட்டணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு, சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ அமீர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில், காதலை வெறுக்கும் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா வாழ்ந்திருப்பார். திரிஷா, லைலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதேவேளை இந்தப் படத்தின் மறுவெளியீட்டின் போது, சூர்யாவும் அமீரும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இந்தச் சந்திப்பு வெறும் நட்பு ரீதியானது மட்டும்தானா அல்லது புதிய படத்திற்கான அஸ்திவாரமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது சூர்யா – அமீர் கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளதுடன், இது மௌனம் பேசியதே படத்தின் இரண்டாம் பாகமா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.