பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமானவரித்துறை

பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமானவரித்துறை
  • PublishedApril 5, 2025

கேரள நடிகரும், எம்புரான் பட இயக்குநருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் படம் அண்மையில் வெளியானது. பெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் 2ம் பாகமான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது.

அதேநேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியது. இதற்கு அந்த படத்தில் நடித்த மோகன்லால் வருத்தம் தெரிவிக்க, சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகளும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜூக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எம்புரான் படத்துக்கு முன்னதாக கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3படங்களை பிருத்விராஜ் தயாரித்து இருந்தார்.

அந்த படங்களில் அவர் நடித்தும் இருந்தார். ஆனால் நடிகருக்கான ஊதியத்தை பெறாமல், இணை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் ரூ.40 கோடி வரை சம்பளம் பெற்றார் என செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, பிருத்விராஜ் இயக்கிய கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3 படங்களின் வருமானம் தொடர்பான கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீசில் ஏப்.29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

நேற்றுதான் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் நிறுவனத்தின், ஸ்ரீ கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *