விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா….
![விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா….](https://cinemazda.com/wp-content/uploads/2024/01/screenshot2944-down-1704437860.webp)
கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா.
விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதேநேரம் சூர்யா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்ததோடு, வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து தற்போது சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தவர் சூர்யா. இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடம் சென்ற சூர்யா, அங்கு தேம்பி தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, “அண்ணனைப் போல யாரும் கிடையாது, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.
எப்போதும் அவரின் நினைவு இருக்கும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது” என்றார்.
அதேபோல், “பெரியண்ணா படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அப்பாவுக்காக வேண்டிக்கொண்டு 8 ஆண்டுகள் நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். அதனைப் பார்த்த கேப்டன் ‘நீ நடிக்குற… அதனால உடம்புல சக்தி வேணும்… நீ வேற எதாவது வேண்டுதல் பண்ணிக்கோன்னு..’ சொல்லி அவர் தட்டுல இருந்து சாப்பாடு எடுத்து எனக்கு ஊட்டி விட்டதாக கண்ணீர் மல்க கூறினார் சூர்யா. அவரது பேட்டி தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.