“விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” : விஜய் வெளியிட்ட வீடியோ

“விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” : விஜய் வெளியிட்ட வீடியோ
  • PublishedMarch 10, 2024

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைபவர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்” என்பது உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் விஜய் அண்மையில், அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகளை நியமித்து, பணிகளைத் தீவிரப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய். கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் பேசியுள்ள விஜய், “இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” எனப் பேசியுள்ளார்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *