இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை – விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு…

இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை – விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு…
  • PublishedNovember 29, 2023

ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான ரோல் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துபவர் தான் விஜய் சேதுபதி.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

அப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.

பின்னர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர், கமலுக்கு வில்லனாக விக்ரம் என இவர் நெகடிவ் ரோலில் நடித்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் இவருக்கு தமிழ் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட்டில் இருந்தும் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் விஜய் சேதுபதி அண்மையில் வில்லனாக நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது :

“ஹீரோக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய அழுத்தம் இருப்பதால் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.

வில்லனாக நடிக்கும்போது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. ஹீரோவை விட பவர்புல்லாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைப்பார்கள். நான் நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டுவிடுகின்றன.

அதனால் சில வருடங்கள் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன் என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *