“என்னை மன்னிச்சுடுங்க சாமி” விஷால் அஞ்சலி
![“என்னை மன்னிச்சுடுங்க சாமி” விஷால் அஞ்சலி](https://cinemazda.com/wp-content/uploads/2024/01/NTLRG_20240109133022086807gv.jpg)
நடிகரும், தே.மு.தி.க, தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு லட்சக்கணக்கான பேர் அஞ்சலி செலுத்தினர். இன்னமும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் தினமும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் இறந்த சமயம் வெளிநாடுகளில் இருந்த திரைப்பிரபலங்கள் பலரும் கடந்த சில தினங்களாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சரத்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கலை உலகத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கிய மனிதர் கேப்டன் விஜயகாந்த். இறந்த பிறகு தான் நாம் ஒருவரை சாமி என்போம். உயிரோடு இருக்கும்போதே அவர் சாமியாக வாழ்ந்தார்.
அவர் இறந்த சமயம் நான் இருந்திருக்க வேண்டும். அவருக்கு எல்லா விஷயமும் செய்திருக்க வேண்டும். என்னை மன்னிச்சுடுங்க சாமி. கேப்டன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் என்றும் நம் மனதில் இருப்பார்.
நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க எல்லோரும் சம்மதம் சொல்லுவாங்க. யாருக்கும் கண்டிப்பாக கருத்து வேறுபாடு இருக்காது. கூடிய சீக்கிரம் அறிவிப்பு வரும்.
விஜயகாந்த்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கிறார்களோ இல்லையோ, பாரத தேசத்தில் உள்ள அனைவரும் மனதார அஞ்சலி செலுத்தினார்கள். இன்னும் 5 வருஷம் ஆனா கூட அவர் பெயர் காலகாலத்திற்கு நிலைத்து நிற்கும் என்றார்.