இரண்டாவது திருமணம் குறித்த வதந்தி – நடிகை மீனாவின் பதில்.
நடிகை மீனா. ஒரு காலத்தில் அக்கா-தங்கை, காதலி, மனைவி, மகள் என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னுடைய அழகும், நடிப்பும், பாசமும் கலந்து தமிழ் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர். மிக இளமையிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கலக்கத் தொடங்கிய இவர், பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். பெரும் பகுதியான ரசிகர்கள் இன்னும் அவரை முன்னணி கதாநாயகியாகவே பார்க்கிறார்கள். காரணம், அவர் காட்டும் நடிப்புத்திறன், சுயகட்டுப்பாடு, மற்றும் பொது வாழ்வில் தூய்மையான கொள்கைகள் தான்.
கடந்த 2022-ம் ஆண்டில், மீனாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய துயரமான திருப்பம் – கணவர் வித்யா சாகரின் மரணம்.
இந்த சம்பவம் மீனாவுக்கு மட்டுமல்லாமல், அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மீனா, அந்த மரணத்துக்குப் பிறகு, தனது மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகிறார்.
சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் “நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்” என்பது போன்ற வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், நடிகை மீனா சமீபத்தில் நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் “ஜெயம்மு நிச்சயாமு ரா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி, அவர் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசும் நேரமாக மாறியது. நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், ஜகபதி பாபு, மீனாவிடம் “இணையத்தில் உங்களைப் பற்றி வரும் வதந்திகள் உங்களை எப்படி பாதிக்கின்றன?” என கேட்டார்.
அதற்கு மீனா கண்ணீர் கலந்த குரலில், “என் கணவர் மறைந்த பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுமை எவ்வளவு துன்பமாக இருந்தது என்பதை சொல்ல முடியாது. அந்த நேரத்தில் என்னை ஆதரிக்க வேண்டும் என்பவர்கள் கூட, என்னைச் சுற்றி தவறான வதந்திகளை பரப்பியது மிகவும் வலிக்கக் கூடியது. குறிப்பாக, என் மகளின் மனநிலையையும் அது பாதித்தது. ஒரு குழந்தை தன் தந்தையை இழந்து வருத்தப்படும்போது, அவளது தாயைச் சுற்றி இப்படியான செய்திகளை அவள் வாசிக்கிறாள் என்றால், அது அவரை எப்படி பாதிக்கும் என்பதை யாராவது சிந்திக்கிறார்களா?நான் ஒரு பொது நபராக இருக்கலாம். ஆனால் நான் முதலில் ஒரு மனைவி, பின்னர் ஒரு தாய். என் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு முக்கியமானது. என் கணவர் மறைவுக்குப் பிறகு, வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கத்தான் நினைத்தேன். ஆனால் அதில் கூட சமூக வலைத்தள வதந்திகள் இடையூறாகின என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.